தமிழகத்தில் மின்பற்றாக்குறைப் பெரிய அளவில் உள்ளதால், வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வரும் மின்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தி தமிழகத்திற்குத் தர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் மின் வெட்டால் பொதுமக்கள், கிராமப்புற மக்கள், ஏழை விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மின்வெட்டை போக்க மத்திய அரசு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும்.
வெளி மாநிலங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து வழங்கப்படும் மின் சாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும். பெரிய தனியார் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும்.
அதற்கு பதிலாக ஜெனரேட்டர் போன்ற மாற்று வழி மின்சாரத்தை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். மின்சாரத்தை பிரித்து வழங்குவதன் மூலம் ஏராளமான மின் விரையம் ஏற்படுகிறது. இதை தடுத்தாலே மின்வெட்டை தடுக்கலாம் என்றார் அவர்.
|